Archives: டிசம்பர் 2018

செய்தியாளர்

“நான் உனக்கு ஒர செய்தி வைத்திருக்கின்றேன்” என்று கூறி, நான் பங்கு பெறும் கருத்தரங்கில் பணிபுரியும் ஒரு பெண்மணி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தாள். நான் சற்று அதிர்ச்சியடைந்ததோடு, உணர்ச்சிவசப்பட்டேன். ஆனால், நான் அதில் உன் சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளது” என்ற செய்தியை வாசித்து மகிழ்ந்தேன்.

செய்திகள் நல்லதாகவோ, கெட்டதாகவோ அல்லது சாவால்களைத் தரும் வார்த்தைகளாகவோ இருக்கலாம். பழைய ஏற்பாட்டில், தேவன் தமது தீர்க்கதரிசகளை நம்பிக்கைத் தரும் செய்திகளைக் கொடுக்கவும் நியாயத்தீர்ப்பினை வழங்கவும் பயன்படுத்தினார். ஆனால், நாம் அச்செய்திகளை சற்று ஆழ்ந்துபார்த்தால், அவருடைய நியாயத்தீர்ப்பின் வார்த்தைகள் கூட மனந்திரும்பலுக்கும், சுகமளிக்கவும், மீட்கப்படவும் வழிநடத்துவதாகயிருக்கும்.

இரண்டு வகையான செய்திகளை மல்கியா 3ல் காணலாம். தேவன் ஒரு செய்தியாளரை அனுப்பி, அவன் தனக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான் என வாக்களிக்கின்றார். யோவான் ஸ்நானகன் மெய்யான செய்தியாளரின் வருகையை முன்னறிவிக்கின்றார் (மத். 3:11). “அந்த உடன்படிக்கையின் செய்தியாளர்” இயேசுகிறிஸ்து (மல். 3:1) அவர் தேவனுடைய வாக்குத்தத்ததை நிறைவேற்றுவார். “அவர் புடமிடுகிறவனுடைய அக்னியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும்” இருப்பார் (வச. 2). அவர் தமது வார்த்தையை நம்புகிறவர்களைச் சுத்திகரிப்பார். தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம் ஜனங்களைச் சுத்திகரிப்பார். ஏனெனில், அவர் தம் ஜனங்களின் நல்வாழ்வின் மீது அக்கரை கொண்டுள்ளார்.

தேவனுடைய செய்தி, அன்பு, நம்பிக்கை மற்றும் விடுதலையைக் கொடுக்கும் செய்தி. அவர் தம் குமாரனையே செய்தியாளராக அனுப்புகின்றார். அவர் நம் மொழியில் பேசுகின்றார். சில வேளைகளில் நம்மைத் திருத்தும் செய்தியைத் தருகின்றார். ஆனால், எப்பொழுதும் நம்பிக்கையைத் தரும் செய்தியையே தருகின்றார். நாம் அவருடைய செய்தியை முற்றிலும் நம்பலாம்.

எல்லாம் புதிதாயின

பயனற்ற பொருட்களைக் குவிக்குமிடங்களைப் பார்வையிடுவது எனக்கு மிகவும் ஆர்வமான ஒன்று. கார்களில் வேலைசெய்வதை தான் விரும்புவேன். எனவே, எங்கள் வீட்டினருகிலுள்ள அத்தகைய ஓரிடத்திற்கு அடிக்கடி செல்வதுண்டு, அது ஒரு தனிமையான இடம். அங்குள்ள கைவிடப்பட்ட கப்பல்களினூடே காற்று ஊளையிடும். ஆவை ஒரு காலத்தில், போர் காலங்களில்யாரோ ஒருவரிடமிருந்து, கடலில் பிடிக்கப்பட்டவை. சில உடைந்து போயிருந்தன, சில பழையதாயிருந்தன, சில நன்கு பயன்பட்டு, காலம் தாண்டிக் கிடந்தன. அவற்றின் வரிசையினூடே நான் நடந்து செல்லும்போது, சில வேளைகளில் ஒரு கார் என் கண்னணக் கவரும். நான் அவற்றைக் குறித்து ஆச்சரியப்பட்டு, அவை நன்கு ஓடிக்கொண்டிருந்த நாட்களில், அவை நிறைவேற்றியிருக்கும் சாதனைகளை எண்ணிப்பார்ப்பேன். பழங்காலத்தைக் காணத்திறக்கும் கதவுபோல நின்று ஒவ்வொன்றும் ஒரு கதையைத் கூறும். புதிய ரகங்களின் மீது மோகங்கொண்ட மனிதர்களைப் பற்றியும் தெரிய வருவதால், அது ஒரு நேரப் போக்கிற்கான இடம் என்றே கூறலாம்.

ஆனால், நான், சிறப்பாக ஒரு பழைய வாகனத்தின் பகுதிக்கு புதுவாழ்வு கொடுப்பதில் இன்பம் காண்பவன். புறக்கணிக்கப்பட்ட ஏதோவொன்றை எடுத்து, அதை ஒரு மீட்கப்பட்ட வாகனத்தில் பொருத்தி, அதற்கு ஒரு புதிய வடிவம் கொடுத்து காலத்தின் மேலும் அழிவின் மேலும் ஒரு வெற்றியைக் கண்டதாக உணர்வேன்.

வேதாகமத்தின் கடைசிபகுதியில் இயேசு கூறிய வார்த்தைகளை நான்; சில வேளைகளில் நினைத்துக் கொள்வேன். “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” (வெளி. 21:5). இந்த வார்த்தைகள், தேவன் தம் படைப்புகளை புதிப்பிக்கின்றதைக் குறிக்கும். அது விசுவாசிகளையும் குறிக்கும். ஏற்கனவே இயேசுவை ஏற்றுக் கொண்ட அனைவருமே அவருக்குள் “புது சிருஷ்டிகள்” (2 கொரி. 5:17).

ஒரு நாள் நாம் நமக்கு வாக்களிக்கப்ட்டுள்ள முடிவில்லா நாட்களுக்குள் என்றும் அவரோடு வாழும்படி செல்வோம் (யோவா. 14:3) அங்கு மூப்பு, வியாதியும் யாரையும் சாவுக்குள்ளாக்க முடியாது. நாம் அங்கு நித்திய வாழ்வாகிய சாதனையைத் தொடரலாம். நாம் சொல்ல வேண்டிய கதை என்னவுள்ளது? அதுதான் நமது இரட்சகரின் விடுவிக்கும் அன்பைப் பற்றிய கதையும், என்றும் நிலைத்திருக்கும் அவருடைய உண்மையைப்பற்றிய கதையுமேயாகும்.

தேவன் “இல்லை” எனச் சொல்லும்போது

நான் பதினெட்டு வயதாயிருந்த போது, சட்டப்படி கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டேன். அங்கிருந்தவர்களெல்லாரும் சிங்கப்பூரைச் சேர்ந்த இளம் வயதினராக இருந்ததால், நான் எனக்கொரு இலகுவான வேலைகிடைக்கும்படி தீவிரமாக ஜெபித்தேன். ஓர் எழுத்தர், அல்லது ஓட்டுனர் என ஓர் எளிய வேலையை எதிர்பார்த்தேன். நான் பலசாலியல்ல, எனவே அங்குள்ள கடினமான போர்க்கால பயிற்சிகளில் எனக்கு விலக்கு கிடைக்குமென நம்பினேன். ஒருநாள் மாலை வேளையில் நான் வேதாகமத்தை வாசித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பக்கத்திலிருந்த ஒரு வசனம் என்னை ஈர்த்தது. “என் கிருபை உனக்குப் போதும்” (2 கொரி. 12:9).

என் இருதயம் சோர்ந்தது. ஆனால், அப்படி இருந்திருக்கக் கூடாது. தேவன் என் ஜெபத்தைக் கேட்டார். ஒருவேளை எனக்கு கஷ்டமான வேலை கொடுக்கப்பட்டாலும் தேவன் எனக்குத் தேவையான பெலத்தைத் தருவார்.

நான் இராணுவக் கவசமணிந்து தரைப்படையில் சேர்ந்தேன். எனக்கு விருப்பமில்லாத வேலையைச் செய்தேன். இப்போது தான் என் முந்திய காலத்தை நினைத்துப் பார்க்கின்றேன். தேவன் நான் விரும்பியதை எனக்குத்தரவில்லை. ஆகையால் தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். அங்கு கொடுக்கப்பட்ட பயிற்சியும், அநுபவமும் என்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெலப்படுத்தியது. திடமான மனிதனாக ஜீவிக்க எனக்கு நம்பிக்கையைத் தந்தது.

ஏசாயா 25:1-5 வசனங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய தண்டனையையும் அதன்பின், அவர்களின் விடுதலையையும் உரைத்தபின், தேவனுடைய திட்டங்களுக்காக அவரைப் போற்றுகின்றார். ஏசாயா குறிப்பிட்டுள்ள அத்தனை அதிசயமான காரியங்களும்” வெகுகாலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டன (வச. 1) ஆயினும், அவை நிறைவேற சில கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தது.

நாம் தேவனிடம் ஏதோவொரு நல்ல காரியத்திற்காக கேட்டுக் கொண்டிருக்கும் போது, எடுத்துக்காட்டாக ஒருவரின் இக்கட்டிலிருந்து அவரை விடுவிக்குமாறு கேட்கும்போது, இல்லையென பதிலளிக்கப்படுமாயின், அதனைப் புரிந்து கொள்வது கடினமாகத்தானிருக்கும். அப்பொழுதுதான் நாம் தேவனுடைய நல்லதிட்டத்தின் உண்மையை உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும் ஏனென்று நமக்குப் புரியாது. ஆனால், நாம் தேவனுடைய அன்பு, நன்மை, மற்றும் உண்மையின் மீது நம்பிக்கையோடிருப்போம்.

மனக்கறை நீக்கும் தினம்

2006 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கூட்ட மக்கள் புதிய வருடத்தையொட்டி ஒரு நாளில் ஒரு வித்தியாசமான நிகழ்வைக் கொண்டாடுகின்றனர். அது தான் மனதின் கறைகளை நீக்கும் தினம். லத்தீன்-அமெரிக்க கலாச்சாரத்தைத் தழுவி, கடந்த ஆண்டில் மக்கள் தங்கள் மனதில் படிந்துள்ள மனவருத்தங்கள், விரும்பத்தகாத நினைவுகள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை காகிதத்தில் எழுதி துண்டுகளாக்கி குப்பையில் சேர்த்து விடுவர், அல்லது ஒரு கனமான சுத்தியலால் அடித்துச் சிதைத்து விடுவர்.

சங்கீதம் 103ல் சங்கீதக்காரன், மக்கள் தங்கள் மனதிலுள்ள விரும்பத்தகாத எண்ணங்களைத் தூக்கி எறிந்துவிடும்படி வலியுறுத்துகின்றார். தேவன் நம்முடைய பாவங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றார் என நினைவுபடுத்துகின்றார். தேவன் தம் ஜனங்களின் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பினை விளக்க, சில காட்சிகளை வார்த்தைகளில் கொண்டு வருகின்றார். அவர் தேவனுடைய பரந்த அன்பினை விளக்க, பூமிக்கும் வானத்திற்குமுள்ளத் தூரத்தை ஒப்பிடுகின்றார் (வச. 11). சங்கீதக்காரன் தேவனுடைய மன்னிக்கும் சிந்தையை வளிமண்டல பொருட்களோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். சூரியன் உதிக்கும் இடத்திற்கும், சூரியன் மறையும் இடத்திற்குமுள்ள தொலைவில் முழு பாவங்களையும் அகற்றிவிட்டார் (வச. 12) என்கின்றார். தேவன் தம் ஜனங்களின் மீது கொண்டுள்ள அன்பும், அவருடைய மன்னிக்கும் சிந்தையும் முழுமையானது, முடிவில்லாதது என்கின்றார். தேவன் தம் ஜனங்களை அவர்களின் மீறுதல்களின் வல்லமையிலிருந்து முற்றிலும் மீட்டு அவர்களை முழுமையாக மன்னிக்கின்றார்.

என்ன ஒரு நல்ல செய்தி! நாம் நம் பாவக்கறைகளை அகற்றிட புதிய வருடம் வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தோடு, நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவத்திலிருந்து மனம் திரும்புவோமாகில் அவர் நம் பாவங்களை அகற்றி, அவற்றைக் கடலின் ஆழங்களில் போட்டுவிடுகி;றார். இன்றே நமது கறைநீக்கும் தினம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கட்டுப்படுத்துகிறார்

அது ஏன் ஒரே நேரத்தில் எல்லாம் சம்பவிக்கிறது என்று விமலாவுக்கு புரியவில்லை. நிகழ்ந்தது போதாதென்று, அவளது மகளுக்குப் பள்ளியில் கால் முறிந்தது, மேலும் அவளும் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாள். இவ்வாறு நிகழ நான் என்ன செய்தேன்? விமலா வியந்தாள். அவளால் செய்ய முடிந்ததெல்லாம் தேவனிடம் பெலனைக் கேட்பதுதான்.

விமலா அனுபவித்ததை காட்டிலும் வலியும் இழப்பும் மிக அதிகமான பேரழிவும் தன்னை ஏன் தாக்கியது என்று யோபுக்கு தெரியவில்லை. அவரது ஆத்துமாவுக்கு எதிரான ஆவிக்குரிய யுத்தத்தை அவர் அறிந்திருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. சாத்தான் யோபுவின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினான், அவர் எல்லாவற்றையும் இழந்தால் அவர் தேவனை விட்டு விலகுவார் என்றான் (யோபு 1:6-12). பேரழிவு ஏற்பட்டபோது, யோபின் நண்பர்கள் அவர் செய்த பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்படுகிறார் என்று வலியுறுத்தினார்கள். அது உண்மையல்ல, ஆனால் அவர் “ஏன் நான்?” என்று ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். தேவன் அதை அனுமதித்தார் என்பது அவருக்குத் தெரியாது.

யோபின் கதை துன்பத்தையும் விசுவாசத்தையும் பற்றி ஒரு ஆற்றல்மிகு படிப்பினையை வழங்குகிறது. நம் வலிக்கான காரணத்தை நாம் கண்டுபிடிக்க முயலலாம், ஆனால் நம் வாழ்நாளில் நாம் புரிந்து கொள்ளாத வகையில் திரைக்குப் பின்பாக ஒரு பெரிய சம்பவம் இருக்கலாம்.

யோபுவைப் போலவே, தேவன் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்று நமக்குத் தெரிந்தவற்றைப் பற்றிக்கொள்ளலாம். அவ்வாறு சொல்வது எளிதான காரியம் அல்ல, ஆனால் அவருடைய வேதனையின் மத்தியில், யோபு தேவனை நோக்கி, அவருடைய சர்வ வல்லமையில் நம்பிக்கை வைத்தார்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்” (வ. 21). என்ன நடந்தாலும், நமக்குப் புரியாதபோதும் நாமும் தேவன் மீது நம்பிக்கை வைப்போமாக. 

 

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது.